முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு


முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 14 Nov 2018 4:19 AM GMT (Updated: 14 Nov 2018 4:19 AM GMT)

முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது என்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசினார்.

சிங்கப்பூர்,

2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பின்டெக் விழாவில் உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:-
உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவில் தற்போது தொழில் நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது.  130 கோடி மக்களின் வாழ்க்கையை இந்த புரட்சி  மாற்றி உள்ளது.உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாக உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புக்களையும் உருவாக்கி தருகிறது.  

2014-க்கு முன்பு 50 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே வங்கி கணக்கு வைத்திருந்தனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு, ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு புறநகர் கிராமங்களும் வளர்ச்சி திட்டங்களால் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. மனித உள்கட்டமைப்பு அதிகமுடைய நாடு இந்தியா. விரைவில் உலகின் தொடக்க மையமாக இந்தியா மாறும்.

120 கோடி பேருக்கு வங்கி கணக்கு அளிக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளது. நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாதான் உங்கள் மிகச்சிறந்த மையம் என்று  அனைத்து பின் டெக் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் நிறுவனங்களிடம்  நான் சொல்லிக்கொள்கிறேன்” என்றார். 

Next Story