வீர சவார்கருக்கு எதிராக அவதூறு பேச்சு; ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு


வீர சவார்கருக்கு எதிராக அவதூறு பேச்சு; ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 AM GMT (Updated: 15 Nov 2018 11:00 AM GMT)

சுதந்திர போராட்ட வீரர் வீர சவார்கருக்கு எதிராக அவதூறாக பேசினார் என கூறி அவரது பேரன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த அக்டோபரில் பேசும்பொழுது, நாட்டுப்பற்றுக்கான அடையாளம் என பா.ஜ.க. வீர சவார்க்கரை வழிபடுகிறது.  நாடாளுமன்றத்தில் அவரது உருவ படத்தினை பிரதமர் மோடி வைத்துள்ளார்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபொழுது, காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருந்தனர்.  வீர சவார்க்கர் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார்.  தன்னை விடுவிக்கும்படி ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார்.  அவர் வீரர் (தைரியசாலி) இல்லை என கூறினார்.

இந்துத்துவாவை பிரபலப்படுத்தியவர் வீர சவார்க்கர் என பரவலாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் அவரது பேரன் ரஞ்ஜீத் சவார்க்கர், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு எதிராக சிவாஜி பூங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி ஊடகக்காரர்களிடம் அவர் பேசும்பொழுது, ஆங்கிலேயர்களால் 27 வருடங்கள் சிறை வைக்கப்பட்டவர் சவார்க்கர்.  தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்பொழுது, சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி ஆங்கிலேயர்களிடம் சவார்க்கர் மன்னிப்பு கோரினார் என பேசியுள்ளார்.  இது தவறு.

சாவர்க்கர் ஜியை அவதூறு செய்ததற்காக ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

Next Story