நேரு குடும்பத்தை சேராத ஒருவருக்கு தலைவர் பதவி வழங்க முடியுமா? காங்கிரசுக்கு மோடி சவால்


நேரு குடும்பத்தை சேராத ஒருவருக்கு தலைவர் பதவி வழங்க முடியுமா? காங்கிரசுக்கு மோடி சவால்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:58 AM GMT (Updated: 16 Nov 2018 11:58 AM GMT)

நேரு குடும்பத்தை சேராத ஒருவருக்கு தலைவர் பதவி வழங்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சிக்கு மோடி சவால் விடுத்துள்ளார்.

போபால்,

230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு  நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர். 

பிரதமர் மோடி இன்று தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.  குவாலியர் மாவட்டத்தின் அம்பிகாபூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்துள்ளது என்பதை  மக்களுக்கு அவர்கள்  தெரியப்படுத்த வேண்டும். 

செங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உரையாற்றி வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சியும் அமைதியும் நிலவி வருகின்றன.  ஆனால் காங்கிரஸ் உருவாக்கிய தெலுங்கானா மாநிலத்தின் தற்போது நிலைமை என்ன? கடந்த நான்கரை ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தவிர வேறு ஒருவரை நியமித்தால், ஜவகர்லால் நேரு உருவாக்கியது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை நாங்கள் நம்புகிறோம்.

நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுகிறேன்.  அந்த கட்சியிலேயே காந்தியின் குடும்பத்தைச் சேராத சில நல்லத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை தலைவர்களாக்கிக் காட்டுங்கள். 

இந்தியாவில் உள்ள ஏழைகளின் கஷ்டம் என்னவென்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.  ஆனால் ஒரு டீ விற்பனையாளரால் நிச்சயம் உணர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story