கொச்சி விமான நிலையத்தில் வெளியேறவிடாமல் பக்தர்கள் போராட்டம், திருப்தி தேசாய் புனே திரும்புகிறார்


கொச்சி விமான நிலையத்தில் வெளியேறவிடாமல் பக்தர்கள் போராட்டம், திருப்தி தேசாய் புனே திரும்புகிறார்
x
தினத்தந்தி 16 Nov 2018 2:09 PM GMT (Updated: 16 Nov 2018 2:09 PM GMT)

கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேறவிடாமல் பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் திருப்தி தேசாய் புனே திரும்ப திட்டமிட்டுள்ளார்.

கொச்சி,

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட்டது. கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில் பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே பிரவேசிக்க முடியாத வகையில் போராட்டக்குழுவினர் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டதால் திருப்தி தேசாயை வெளியே அனுமதிக்கவில்லை. 12 மணி நேரமாக தேசாய் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

அய்யப்ப பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் விமான நிலையம் செல்லும் நிலை காணப்பட்டது. 

12 மணி நேரத்திற்கு மேல் விமான நிலையத்தில் இருந்த திருப்தி தேசாய் புனே திரும்ப முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலைக்கு செல்ல போராட்டக்காரர்கள் அனுமதிக்காத நிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். இன்று இரவே அவர் புனே திரும்புகிறார். திருப்தி தேசாய் பேசுகையில், “எங்களுக்கு உதவி செய்யக்கூடாது என டாக்சி டிரைவர்களை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு இடம் வழங்கினால் ஓட்டல்களை அடித்து நொறுக்குவோம் என மிரட்டப்பட்டுள்ளது. எங்களுக்கு தொல்லைக் கொடுக்கும் மற்றும் மிரட்டும் மக்கள் தங்களை அய்யப்ப பக்தர்கள் என்று சொல்லிக்கொள்வதை பார்ப்பது என்னை கவலையடைய செய்துள்ளது,” என கூறியுள்ளார்.


Next Story