ஜம்மு காஷ்மீர்: பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது


ஜம்மு காஷ்மீர்: பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது
x
தினத்தந்தி 17 Nov 2018 3:23 AM GMT (Updated: 17 Nov 2018 3:23 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில், 4,500 கிராம ஊராட்சிகளுக்கும், 35,000 ஊராட்சி வார்டுகளுக்கும் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 536 கிராம ஊராட்சிகளுக்கும், 4,048 ஊராட்சி வார்டுகளுக்கும் சனிக்கிழமை  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 6 மாவட்டங்களிலும், லடாக்கில் ஒரு மாவட்டத்திலும், ஜம்முவில் 7 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35-ஏ பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனைக் கண்டித்தும், 35-ஏ பிரிவை பாதுகாக்க வலியுறுத்தியும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துவிட்டன.

இதேபோல், தேர்தலை புறக்கணிக்குமாறு, பொதுமக்களுக்கு பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 


Next Story