டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 9:48 PM GMT)

டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மவுசமி கவுதம் (வயது 35). திருமணம் ஆன இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இவர் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவருடன் பணிபுரியும் சிலருக்கும், விமான நிறுவனம் சார்பில் தென் மேற்கு டெல்லியில் உள்ள குர்கான் நகரில் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக குர்கான் சுசாந்த் லோக் பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து அவர் பயிற்சிக்கு சென்று வந்தார். அதன்பின்பு கடந்த வியாழக்கிழமை இரவு விடுதியில் உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றார்.

நேற்றுமுன்தினம் வெகு நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விருந்தினர் இல்ல ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மவுசமி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயிற்சியை முடித்து மவுசமி வெள்ளிக்கிழமை அசாம் செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். ஆனால் அப்படிச் செல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். துப்பட்டாவை பயன்படுத்தி அவர் தூக்குப் போட்டு உள்ளார் அவருடைய உறவினர்கள் வந்த பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்படும். இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.


Next Story