சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை...! பினராயி விஜயன் சொல்வது என்ன?


சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாங்கள் எதுவும் செய்யவில்லை...! பினராயி விஜயன் சொல்வது என்ன?
x
தினத்தந்தி 19 Nov 2018 11:54 AM GMT (Updated: 19 Nov 2018 11:54 AM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நாங்கள் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பினராய் விஜயன் கூறியுள்ளார்.


  கோழிக்கோடு,


சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தி மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு ஸ்திரமாக உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் மேற்கொள்கிறது. 



நேற்றிரவு கோவில் பகுதியில் போராட்டம் நடத்தியவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்...

சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நாங்கள் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் பினராய் விஜயன் பதிலுரைத்துள்ளார். 

போராட்டம் ஒருபுறம் தொடரும் நிலையில் பினராய் விஜயன் கேரள பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசுகையில், “போராட்டம் மேற்கொள்பவர்கள் அய்யப்ப பக்தர்கள் கிடையாது. பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று சன்னிதானம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முகாம் அமைக்கிறார்கள். சபரிமலையில் பிரச்சனையை ஏற்படுத்த யாரையும் அரசு அனுமதிக்காது. 

நாங்கள் எதுவும் செய்யவில்லை

அய்யப்ப பக்தர்களுடன என்னுடைய அரசு நிற்கிறது. அய்யப்பன் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த முயற்சி செய்தமைக்காக என்னுடைய அரசு குறி வைக்கப்படுகிறது. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் எங்களுடைய அரசு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவது என்பது அரசியலமைப்பு பொறுப்பாகும். அய்யப்ப பக்தர்களுக்கு எதிராக அரசு உள்ளது என்று மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் மீடியாக்கள் விழுந்துவிட வேண்டாம். 

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதை தவிர்த்து அரசிடம் எந்தஒரு வழியும் கிடையாது. கேரளாவில் தன்னுடைய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சங்பரிவார் முயற்சி செய்கிறது. அவர்களுடைய கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறினார். 

Next Story