ஊழல் குற்றச்சாட்டு வழக்கு: சி.பி.ஐ. இயக்குநரின் பதில் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


ஊழல் குற்றச்சாட்டு வழக்கு:   சி.பி.ஐ. இயக்குநரின் பதில் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 19 Nov 2018 12:34 PM GMT (Updated: 19 Nov 2018 12:34 PM GMT)

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீது தனது தரப்பு பதில் அறிக்கையை சி.பி.ஐ. இயக்குநர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் குமார் வர்மா மற்றும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி கொண்டனர்.

இந்த நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சி.பி.ஐ. இயக்குனர் மீதான புகார்கள் பற்றி ரகசியமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அலோக் வர்மாவை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரித்தது. பின்னர், விசாரணையின் அறிக்கையை அண்மையில் மூடி முத்திரையிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் நகல் அலோக் வர்மாவுக்கு அளிக்கப்படவேண்டும். அவர் இதற்கு திங்கட்கிழமைக்குள் பதில் தரவேண்டும். இந்த வழக்கை 20ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் மூடிய முத்திரையிட்ட உறையில் தனது பதிலை அளிக்கும்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சி.பி.ஐ. இயக்குநரிடம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று கேட்டு கொண்டது.

தொடர்ந்து, விசாரணை தேதியை நாங்கள் மாற்ற போவதில்லை.  மிக விரைவில் பதில் அறிக்கையை அளியுங்கள்.  உங்களது பதிலை நாங்கள் படித்து பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்தது.

இதனை அடுத்து சி.பி.ஐ. இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர நாராயணன், பதில் அறிக்கையை சமர்ப்பித்து விடுவோம் என கூறினார்.

இந்நிலையில், மூடி முத்திரையிட்ட உறையில் தனது தரப்பு பதிலை சி.பி.ஐ. இயக்குநர் வர்மா சார்பில் இன்று மதியம் 1 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டது.  மிக குறைந்த நேரமே நாங்கள் கேட்டிருந்த நிலையில் பொது செயலரிடம் அதனை சமர்ப்பித்து விட்டோம் என வர்மாவின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Next Story