சபரிமலை விவகாரம்: அய்யப்ப பக்தர்கள் மீது கெடுபிடி - போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை


சபரிமலை விவகாரம்: அய்யப்ப பக்தர்கள் மீது கெடுபிடி - போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2018 6:39 PM GMT (Updated: 19 Nov 2018 6:39 PM GMT)

சபரிமலையில் அய்யப்ப பக்தர்களிடம் கெடுபிடி செய்ததாக, போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்து வருகிறார்கள். அதை எதிர்த்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 144 தடை உத்தரவை மீறியதால், போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதை ஏற்காத நீதிபதிகள், போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

எந்த அதிகாரத்தின் கீழ், பக்தர்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை போலீஸ் தடுக்கிறது? தரையில் தண்ணீரை ஊற்றி பக்தர்களுக்கு இடையூறு செய்யுமாறு யார் சொன்னது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியலையும், அவர்களின் செயலையும் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விவரத்தை டி.ஜி.பி. தெரிவிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. உண்மையான பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். நெய் அபிஷேகத்துக்கு டிக்கெட் எடுத்த பக்தர்கள், இரவில் தங்கி இருந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

அடுத்தகட்ட விசாரணை, 23-ந் தேதி நடக்கிறது.


Next Story