கர்நாடகத்தில் கால்வாய்க்குள் பஸ் பாய்ந்தது; 30 பேர் பரிதாப பலி - பிரதமர், ஜனாதிபதி இரங்கல்


கர்நாடகத்தில் கால்வாய்க்குள் பஸ் பாய்ந்தது; 30 பேர் பரிதாப பலி - பிரதமர், ஜனாதிபதி இரங்கல்
x
தினத்தந்தி 24 Nov 2018 10:30 PM GMT (Updated: 24 Nov 2018 8:12 PM GMT)

மண்டியா அருகே தனியார் பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலியானார்கள்.

மைசூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து நேற்று பகல் 12 மணி அளவில் மண்டியா நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சனிக்கிழமையான நேற்று பள்ளிக்கு அரை நாள் விடுமுறை என்பதால் பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில் பயணித்தனர்.

இந்த பஸ் பாண்டவபுரா தாலுகா கனகனமரடி கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்தது. அந்த வழியாக கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை பாசன கால்வாய் செல்கிறது. தற்போது பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

இதனால் பஸ்சில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் அனைவரும் கூச்சல்போட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ், சாலையோரம் ஓடும் 12 அடி ஆழ கால்வாய்க்குள் பாய்ந்தது. கால்வாயில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பஸ் நீருக்குள் மூழ்கியது. இதனால் பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்கள் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர்.

தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்துசென்று பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாண்டவபுரா போலீசார் மற்றும் 6 வாகனங்களில் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பஸ்சுக்குள் சிக்கியவர்கள் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. ஒவ்வொருவரின் உடல்களாக மீட்டு, கரையில் வரிசையாக வைக்கப்பட்டன. இந்த கோர விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதில் 16 பேர் பெண்கள், 6 பேர் பள்ளி மாணவ-மாணவிகள்.

பஸ் நீரில் மூழ்கியதும் சில பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அது முடியாமல்போனதால் உயிர்சேதம் அதிகமானதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவது உடனே நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் விபத்து நடந்த பகுதி சோகமயமாக காட்சி அளித்தது. வதேசமுத்திரா கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, அவரது குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரேன்கள் உதவியுடன் சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு கால்வாய்க்குள் இருந்து பஸ் மீட்கப்பட்டது. கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு வேறு யாரும் இறந்துள்ளனரா? என தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் கால்வாய் முழுவதும் தேடிப்பார்த்தனர்.

விபத்தில் பலியானவர்களின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி பாண்டவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய பஸ்சின் டிரைவர் முன்னால் சென்ற பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது பஸ் கால்வாய்க்குள் பாய்ந்தது தெரியவந்தது.

முதல்-மந்திரி குமாரசாமி பலியானவர்களின் உடல் களை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Next Story