புதுவையில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு; பா.ஜ.க.வினர் மீது வழக்கு பதிவு


புதுவையில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு; பா.ஜ.க.வினர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 26 Nov 2018 3:56 AM GMT (Updated: 26 Nov 2018 3:56 AM GMT)

புதுவையில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீசிய பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி,

சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவையில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி, இது கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சினை. இதற்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது.  யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும். கடைக்காரர்களை கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் போராட்ட அழைப்பினை அடுத்து புதுவையில் பெருமளவிலான தனியார் பேருந்துகள் இன்று இயங்கவில்லை.  பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.  போராட்டத்தினால் வன்முறை ஏற்படாமல் தடுப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், புதுவையில் 3 தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.  இந்த சம்பவத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து, கல்வீச்சில் ஈடுபட்ட 4 பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story