ஜம்மு-காஷ்மீரில் 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்: 71.3 சதவீத வாக்குப்பதிவு


ஜம்மு-காஷ்மீரில் 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்: 71.3 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 Nov 2018 5:54 PM GMT (Updated: 27 Nov 2018 5:54 PM GMT)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில், 71.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

339 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1749 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5470 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மதியம் 2 மணிவரை நடைபெற்றது.
 
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மொத்தம் 2618 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 777 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று தேர்தல் நடைபெற்ற பகுதிகளில், 99 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 969 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர்.

இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  82.4 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 32.3 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 71.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

முன்னதாக நவம்பர் 17-ந் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 20-ந் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 24-ந் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 75.2 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.


Next Story