ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நிபந்தனைகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகள் விதிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்தரை செய்துள்ளது. முக்கிய நிபந்தனைகள் வருமாறு:–
புதுடெல்லி,
* ஆலையில் வெளியேறும் திடக்கழிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும்.
இந்த குழுக்களின் அறிக்கைகள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
* உப்பாறு நதிப் படுகையில் 11 இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர துகள்கள் அகற்றப்படவேண்டும்.
* எந்தவகையான கழிவுகளையும் அகற்றுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவேண்டும்.* ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் இடத்தை சுற்றி 25 மீட்டர் சுற்றளவுக்கு பல்வேறு மரங்களை நட்டு பசுமைப்பகுதியை உருவாக்க வேண்டும்.
* ஆலையை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் புகார் அளித்துள்ளபடி அந்தப் பகுதிகளில் பரவலாக உள்ள நோய்கள் பற்றிய புள்ளிவிவரங்களை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சேகரிக்க வேண்டும்.
* கடந்த ஆகஸ்டு 20–ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவில் குறிப்பிட்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளை ஆலை கடைப்பிடிக்க வேண்டும்.
இவை உள்ளிட்ட 25 நிபந்தனைகளை விதித்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.