டிச.4 ஆம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் : மு.க ஸ்டாலின்


டிச.4 ஆம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் : மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Nov 2018 6:29 AM GMT (Updated: 29 Nov 2018 6:37 AM GMT)

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்துள்ளது.

இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 

இந்த கூட்டத்திற்கு, பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக் கோரி திருச்சியில் வரும் 4 -ஆம் தேதி அனைத்துக்கட்சிகள் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். 

மற்ற கட்சிகளை அழைக்க நேரம் இல்லாததால், ஒத்த கருத்துக்களை கொண்ட கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தினோம். புயலால் டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கட்சி பேதங்களை கடந்து அனைத்துக்கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். பாஜகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story