சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் 3-வது நாளாக கடும் அமளி


சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் 3-வது நாளாக கடும் அமளி
x
தினத்தந்தி 30 Nov 2018 7:45 AM GMT (Updated: 30 Nov 2018 7:45 AM GMT)

சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டப்பேரவை 3-வது நாளாக முடங்கியது.

திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இந்த கெடுபிடி நடவடிக்கைகள் கேரள சட்டசபையில் கடந்த இரு தினங்களாக புயலை கிளப்பி வருகிறது. 

இந்த நிலையில், 3-வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை கோவில் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை துவங்கிய 22-வது நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அவை நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர், உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அவையை ஒத்திவைத்து நடவடிக்கை எடுத்தார். 


Next Story