“பாகிஸ்தான் செல்லும்படி ராகுல்காந்தி கூறவில்லை” - பஞ்சாப் மந்திரி சித்து திடீர் பல்டி


“பாகிஸ்தான் செல்லும்படி ராகுல்காந்தி கூறவில்லை” - பஞ்சாப் மந்திரி சித்து திடீர் பல்டி
x
தினத்தந்தி 1 Dec 2018 8:45 PM GMT (Updated: 1 Dec 2018 8:26 PM GMT)

பாகிஸ்தான் செல்லும்படி ராகுல்காந்தி கூறவில்லை என பஞ்சாப் மந்திரி சித்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக் நகரையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை இதற்கான அடிக்கல் நாட்டு விழா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்தது. இதில் இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவும் பங்கேற்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில்தான் பாகிஸ்தான் சென்றதாக தெரிவித்தார். ஆனால் நேற்று இந்த விவகாரத்தில் அவர் திடீர் பல்டி அடித்தார்.

ராகுல்காந்தி என்னை ஒருபோதும் பாகிஸ்தான் செல்லும்படி கூறவில்லை. இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் பாகிஸ்தான் சென்று விழாவில் கலந்து கொண்டேன். இதை உலகமே அறியும் என்றார். மேலும், பஞ்சாப் முதல்-மந்திரியும் முன்னாள் ராணுவ கேப்டனுமான அமரீந்தர் சிங்கை மறைமுகமாக தாக்கும் விதமாக ராகுல்காந்தியை மட்டுமே கேப்டனாக கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநிலத்தின் மற்றொரு மந்திரியான ரஜீந்தர் சிங் கூறும்போது, அமரீந்தர் சிங்கை கேப்டனாக சித்து கருதவில்லை என்றால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என்றார்.


Next Story