சபரிமலை விவகாரம்: கேரள காங்கிரசார் மீது பினராயி விஜயன் கடும் தாக்கு - 4வது நாளாக சட்டசபை முடக்கம்


சபரிமலை விவகாரம்: கேரள காங்கிரசார் மீது பினராயி விஜயன் கடும் தாக்கு - 4வது நாளாக சட்டசபை முடக்கம்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:45 PM GMT (Updated: 3 Dec 2018 9:26 PM GMT)

சபரிமலை விவகாரத்தில் கேரள சட்டசபை 4-வது நாளாக முடங்கிய நிலையில், காங்கிரசார் மீது முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

போலீசாரின் இந்த கெடுபிடிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை விலக்க வலியுறுத்தி மாநில சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் 3 நாட்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பிரச்சினை நேற்று 4-வது நாளாக மீண்டும் சட்டசபையில் எழுப்பப்பட்டது. காலையில் சபை கூடியதும் சபரிமலை விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் அனைவரும் சபையின் மையப்பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர்.

அப்போது சபாநாயகர் மற்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அவர்கள், தாங்கள் வைத்திருந்த பேனர்கள் மற்றும் அட்டைகளை கொண்டு சபாநாயகரை மறைத்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, சபரிமலை விவகாரத்தை முன்வைத்து தங்கள் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை முன் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

இதனால் அவருக்கும் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவுடன் கேரள காங்கிரசார் கூட்டு வைத்திருப்பதாக கூறிய பினராயி விஜயன், அவர்கள் ராகுல் காந்திக்கு பதிலாக அமித்ஷாவின் கட்டளைக்கே கீழ்ப்படிவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுங்கட்சியினருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. எனவே சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.

சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகளை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபை முன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதைப்போல சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணனும் சட்டசபை முன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.


Next Story