சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கருத்து பற்றி விசாரணை வேண்டும் : காங். வலியுறுத்தல்


சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கருத்து பற்றி விசாரணை வேண்டும் : காங். வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Dec 2018 7:10 AM GMT (Updated: 4 Dec 2018 7:10 AM GMT)

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கருத்து பற்றி விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர்,  ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த  ஜனவரி 12-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இந்த  விவகாரத்தில் தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ராவுக்கும்  4 நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர்  நீதிபதிகள், அவர்களுக்குள்ளே பேசி பிரச்சினையை தீர்த்துக் கொண்டனர். 

தற்போது  ஓய்வு பெற்று விட்ட முன்னாள் நீதிபதி  குரியன் ஜோசப்  முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியில் இருந்து  கட்டுப்படுத்த  நினைக்கிறார்  என குற்றஞ்சாட்டி  உள்ளார்.

இது குறித்து என்டிடிவிக்கு அளித்த பேட்டியில்  ஜோசப்  குரியன் கூறும் போது, “தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  சொந்தமாக  முடிவுகளை எடுக்கவில்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்பினோம்.  வெளிப்புற செல்வாக்கின் கீழ்  அவர் முடிவுகளை எடுத்தார். இது நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் பாதுகாப்பு மற்றும்  சுப்ரீம் கோர்ட் அமைப்புக்கு மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது” என்றார்.  நீதிபதியின்  ரிமோட் கண்ட்ரோல் யார் என்று கேட்டபோது, நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் "பின்னால் யார் இருக்கிறார்கள் என  சுட்டிக்காட்ட முடியவில்லை" என கூறினார்.

இந்த நிலையில், குரியன் ஜோசப்பின் குற்றச்சாட்டை வைத்து பார்க்கையில்,  மோடி அரசு நீதித்துறையின் உயர் மட்ட அளவில் தலையீட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிறது. எனவே, குரியன் குற்றச்சாட்டு பற்றி, “ பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதோடு, நீதி விசாரணை மற்றும் பராளுமன்ற விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என  காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

Next Story