21 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் கைது


21 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2018 7:30 AM GMT (Updated: 4 Dec 2018 7:30 AM GMT)

21 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூர்,

கர்நாடகாவின் முக்கிய பத்திரிகையாளர் ஒருவர்  உடுப்பி மாவட்டத்தில் 21 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சந்திரா கே ஹெம்மடி என்பவர் பிரிலேன்ஸ் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் மீது 21 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. உடுப்பி நகரில் பைந்தூர் போலீஸ் நிலையத்தில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்குலியில் மூன்று வழக்குகளும், கொலுருவில் ஒன்றும், குண்டபுராவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உள்ளூர் பிரச்சினைகளை பற்றி எழுத தொடங்கிய அவர்  கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சில பள்ளிகளுக்கு சென்று உள்ளார். அப்போது பள்ளி மாணவர்கள் மற்றும்  அவர்களது பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். பின்னர் மாணவர்களை புகைப்படம் எடுப்பதாக அழைத்து கொண்டு  ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்று அங்கு  குழந்தைகளை பாலியல் துன்புறுத்தி உள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி உள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் 2013 ஆம் ஆண்டு  நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் 21 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததை  ஒப்புக் கொண்டார்.

ஹெம்மடி கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  வருகிற 17-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

Next Story