டிசம்பர் 11-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு சுமித்ரா மகாஜன் அழைப்பு


டிசம்பர் 11-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு சுமித்ரா மகாஜன் அழைப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:12 AM GMT (Updated: 5 Dec 2018 11:53 AM GMT)

குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 11-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18–ந் தேதி தொடங்கியது. அதில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

அந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 10–ந் தேதி முடிந்தது. அதில் 20 மசோதாக்கள், மக்களவையில் நிறைவேறின. இரு அவைகளிலும் கிரிமினல் சட்ட திருத்தம், தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா, திவால் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறின.

இந்த நிலையில் அடுத்து குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. வழக்கமாக இந்த கூட்டத்தொடர் நவம்பர் மாதம் தொடங்கி நடக்கும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் தான் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டும் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் தான் நடத்தப்படுகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11–ந் தேதி வெளியாகின்றன. அதே நாளில்தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் தொடங்குவதால், அந்த தேர்தல் முடிவுகள் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பாக இருக்கும். இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த அவசர சட்டம், கம்பெனி திருத்த அவசர சட்டம் ஆகியவற்றுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு கவனம் செலுத்தும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ரபேல் போர் விமான பேர விவகாரம், இந்த குளிர்கால கூட்டத்தொடரில் புயலை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 11-ம் தேதி  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளதையடுத்து,  கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக 11-ம்தேதி அன்று பகல் 3 மணிக்கு நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவையை சுமூகமாக நடத்திட ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. எனவே அவையை சுமூகமாக நடத்திட ஒத்துழைப்பு தருவது அவசியம் என சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

Next Story