புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி


புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது; அதிகாரிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 5 Dec 2018 3:08 PM GMT (Updated: 5 Dec 2018 3:22 PM GMT)

மைசூரு வன பகுதியில் புலியை பிடிக்க கொண்டு சென்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

பெங்களூரு,

கர்நாடகாவின் மைசூரு நகரில் அந்தரசாந்தி கிராமம் அருகே புலி ஒன்று சுற்றியுள்ளது.  இது அங்கிருந்த கால்நடைகளை கொன்று வந்துள்ளது.  இதனால் அதனை பிடிக்க வன துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் 4 யானைகளை தயார் செய்துள்ளனர்.  இவற்றில் மைசூரு தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் அர்ஜுன் மற்றும் அசோகா ஆகிய இரு ஆண் யானைகளும் இருந்தன.

இந்த நிலையில், புலி இருக்கும் இடத்தினை அறிய பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.  இந்த சத்தம் கேட்டு அசோகா யானை மிரண்டு ஓடியுள்ளது.  இதனால் அதன் மீது அமர்ந்து இருந்த பாகன் கீழே விழுந்துள்ளார்.  அதன்பின் யானை அடர்ந்த காட்டுக்குள் தப்பியோடி விட்டது.

இதனை கண்ட வன துறை அதிகாரிகள் திகைத்து விட்டனர்.  அவர்கள் புலியை பிடிப்பதற்கு பதிலாக தப்பியோடிய யானையை தேடி சென்றுள்ளனர்.

ஆண் யானைகள் மதம் பிடிக்கும் காலங்களில் அவற்றின் உடலில் இனப்பெருக்க சுரப்பிகளில் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்.  அந்த யானை மிக ஆக்ரோச நிலையில் இருக்கும்.

இந்த நிலையில் இதுபற்றி கூறிய வன காவலர் நாராயணசாமி, யானைக்கு மதம் பிடித்து உள்ளது.  அதனால் யானை காட்டுக்குள் தப்பியோடி விட்டது என தெரிவித்துள்ளார்.

Next Story