நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது: ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது - மோடி, ராகுல் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை


நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது: ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது - மோடி, ராகுல் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை
x
தினத்தந்தி 5 Dec 2018 11:30 PM GMT (Updated: 5 Dec 2018 8:28 PM GMT)

ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையாடினர். நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.

ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை (7-ந் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் முக்கியமானது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்றுவதற்கு காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன. இங்கு ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. 199 தொகுதிகளில் மட்டுமே நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ராஜஸ்தானில் 2,188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலில் முடிவாகும்.

பிரதமர் மோடி நேற்று அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் செய்து, பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார். சுமர்பூர் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசினார்.

119 இடங்களை கொண்டுள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணி, பாரதீய ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மல்காஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆட்சியை தொடர்வதற்கும், காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணியும், பாரதீய ஜனதாவும் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் கடும் போட்டியில் உள்ளன.

அங்கு சூரியபேட் மாவட்டம், கொடாட் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் தோன்றிப் பேசினார்கள். அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக சாடினர்.

2 மாநிலங்களிலும் நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவெளி இன்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

நாளை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.

5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலில் அந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரிந்து விடும்.



Next Story