கொல்கத்தாவில் அமித்ஷா யாத்திரைக்கு ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு, பா.ஜனதா அப்செட்!


கொல்கத்தாவில் அமித்ஷா யாத்திரைக்கு ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு, பா.ஜனதா அப்செட்!
x
தினத்தந்தி 6 Dec 2018 1:01 PM GMT (Updated: 6 Dec 2018 1:01 PM GMT)

மேற்கு வங்காள மாநிலத்தில் அமித்ஷா யாத்திரையை மேற்கொள்ள ஐகோர்ட்டு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.



2019-ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் மூன்று நாட்கள் யாத்திரையை மேற்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரைகளை நடத்துவதாக இருந்தது. முதல் யாத்திரை கூச்பெகரில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மாநில அரசு சார்பில் மதரீதியிலான மோதல்கள் ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், அப்படியொரு துரதிஷ்டவசமான சம்பவம் நேரிட்டால் யார் பொறுப்பு என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பா.ஜனதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனின்த்யா மித்ரா, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பாகும் என்றார். இதனையடுத்து அனுமதியளிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜனதா ஆட்சியில்லாத மாநிலமான மேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. அங்கு பா.ஜனதாவிற்கு இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர். 2019 தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்று அமித்ஷா திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பா.ஜனதாவினரை அப்செட் ஆக செய்துள்ளது. 


Next Story