தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது


தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது
x
தினத்தந்தி 7 Dec 2018 1:38 AM GMT (Updated: 7 Dec 2018 1:38 AM GMT)

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் இன்று நடக்கிற ஓட்டுப்பதிவுக்கு மாநில போலீசார், துணை ராணுவம், பிற மாநில போலீஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 446 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. 

ஓட்டுப்பதிவு முடிகிற வரையில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கணக்கில் வராத ரூ.129 கோடி, மது சிக்கியது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக இங்கு வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

Next Story