தெலுங்கானா, ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு துவங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு


தெலுங்கானா, ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு துவங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 2:32 AM GMT (Updated: 7 Dec 2018 2:32 AM GMT)

தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

ஜெய்பூர், 

தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு  தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ஓட்டுப்பதிவுக்கு மாநில போலீசார், துணை ராணுவம், பிற மாநில போலீஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 446 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிகிற வரையில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கணக்கில் வராத ரூ.129 கோடி, மது சிக்கியது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக இங்கு வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.

2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. இங்கு தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்ற காங்கிரசும் கடும் போட்டியில் உள்ளன.பாரதீய ஜனதாவுக்கு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


”பெண் வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பிங்க் வாக்குச்சாவடிகள்”

ராஜஸ்தானில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். அவர்களுக்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பெண் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முழுவதும் பெண்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ள பிங்க் வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 25 வாக்குச்சாவடிகள் ”பிங்க்” வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன. 

Next Story