ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2018 12:15 AM GMT (Updated: 7 Dec 2018 9:54 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்கு கள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட கோரியும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரியும் கதிரேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், சி.பி.ஐ. விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்றும், சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாம் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று கூறி, இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு எதிர்மனுதாரரான சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story