குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும்


குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும்
x
தினத்தந்தி 10 Dec 2018 12:00 AM GMT (Updated: 10 Dec 2018 6:14 AM GMT)

குளிர்கால கூட்டத்தொடருக்காக, நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இதில் அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

குளிர்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை, சோனியா மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்திய விவகாரம் புயலைக் கிளப்பும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 8-ந் தேதி முடிகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிற நாளில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பான முழுமையான கூட்டத்தொடர் இதுதான் என்பதால் இந்த தொடர் சிறப்பு பெறுகிறது.

குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையொட்டி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களில், குளிர்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை ஆளுங்கட்சி கோரும் என தகவல்கள் கூறுகின்றன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை உடனே கட்ட வேண்டும் என்ற கருத்து சங்பரிவார அமைப்புகள் மத்தியில் வலுத்து வருகிறது. இதை பாரதீய ஜனதா கட்சியும் ஆதரிக்கிறது.

அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் தாமதமின்றி, உடனடியாக கட்டப்பட வேண்டும். ராமர் கோவில் என்பது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அம்சம். ஆனால் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிகிறவரையில் அயோத்தி பிரச்சினை குறித்த வழக்கில் விசாரணையை ஒத்தி போட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் வலியுறுத்தியதில் அடிப்படை இல்லை” என கூறினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராமர் கோவில் பிரச்சினையில் ஓரணியில் நின்று புயலைக் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எப்படி கையாளப்போகிறது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

5 மாநில தேர்தலில் குறிப்பாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிற ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில் அவை பலிக்கிறபோது அது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது ராஜஸ்தானில் எழுந்த நில மோசடி புகாரில், அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் விமர்சித்தது.

இந்த விவகாரத்தை அந்தக் கட்சி, நாடாளுமன்றத்தில் எழுப்பும் என கூறப்படுகிறது.

ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையில், நாடாளுமன்றத்திலும் இது குறித்து அவர் குரல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மசோதாக்களை பொறுத்தமட்டில் ‘முத்தலாக்’ மசோதா, மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற பாரதீய ஜனதா கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.

சி.பி.ஐ. இயக்குனர், சிறப்பு இயக்குனர் மோதலில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பப்போவது உறுதி.

நாடாளுமன்றம் நாளை கூடுகிறபோது முதலில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.

எனவே புதன்கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சினைகள் குறித்து இன்று டெல்லியில் நடக்கிற நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதே போன்று பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டமும் இன்று மதியம் நடக்க இருக்கிறது. இதில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கையாள வேண்டிய உத்தி குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.



Next Story