உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்


உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்
x
தினத்தந்தி 10 Dec 2018 2:37 PM GMT (Updated: 10 Dec 2018 2:37 PM GMT)

உர்ஜித் படேல் ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.


புதுடெல்லி,


ரிசர்வ் வங்கி கவனர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் நிலவி வந்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், உர்ஜித் படேல் ராஜினாமா எதிர்ப்பை பதிவு செய்வதாகும். ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருண் ஜெட்லி மத்திய வங்கியை விமர்சனம் செய்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
"ஆர்.பி.ஐ. கவர்னர் உஜ்ஜிதே படேல் பதவி விலகல் பெரும் கவலைக்குரிய விஷயமாகும். அரசு அதிகாரி தன்னுடைய ராஜினாமாவை அறிவிப்பது என்பது எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயமாகும். அவர்கள் தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் நிலையில் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்,” என்று கூறியுள்ளார் ரகுராம் ராஜன். மத்திய அரசுடனான மோதல் போக்கிற்கு இடையே உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளது பங்குச் சந்தைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை வரும் நாட்களில் ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.

 மத்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நியமனம் செய்த வாரியக் குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால் இருதரப்பு இடையேயும் மறைமுகமாக மோதல் காணப்பட்டது. இந்நிலையில் ஆர்.பி.ஐ. குழுவிலிருந்து தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை தள்ளிவைக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். 

Next Story