மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்


மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்
x
தினத்தந்தி 11 Dec 2018 8:27 AM GMT (Updated: 11 Dec 2018 10:53 AM GMT)

தெலுங்கானாவில் மெகா கூட்டணி தோல்வியை தழுவியது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கிய மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் மூன்றாவது கட்சிக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் பா.ஜனதாவை விட்டு ஆட்சி காங்கிரஸ் வசம் செல்கிறது. மற்றொரு பா.ஜனதா ஆளும் மாநிலமான சத்திஷ்காரிலும் பா.ஜனதாவிற்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகிவரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் பேசுகையில், “இப்போது வரையில் தெளிவான நிலவரம் தெரியவரவில்லை.  வெற்றியடைந்துவரும்  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஆனால் தெலுங்கானாவில் மெகா கூட்டணி படுதோல்வியை தழுவியுள்ளது, என தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரையில் ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி சட்டசபையின் ஆய்வு காலம் இருந்தபோதே, சபையை கலைத்து தேர்தலை எதிர்க்கொண்டது.  தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் பிற கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்தது.  பா.ஜனதா தனியாக போட்டியிட்டது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எதிர்பார்க்காத வகையில் அதிகமான தொகுதிகளில் முன்னிலையை பெற்றுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள மொத்தம் 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 87 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும் பா.ஜனதா 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story