எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி; மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி; மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 8:36 AM GMT (Updated: 12 Dec 2018 8:36 AM GMT)

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8ந்தேதி முடியும்.  அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதுவே முழுமையான கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது

நேற்று முதல் நாள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இரு சபைகளும் நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், மேகதாது அணை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியது.  இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் இன்று ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தது.  இதற்காக இரு அவைகளிலும் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கோரி அ.தி.மு.க. நோட்டீஸ் தந்தது.

இதனை தொடர்ந்து, மேகதாது விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.  இதனை அடுத்து மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இதேபோன்று மக்களவையும் அமளியால் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் மக்களவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்பின.  ராமர் கோவில் விவகாரம், ரபேல் போர் விமான பேரம், காவிரி விவகாரம் என பல்வேறு விவகாரங்களை காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கு தேச கட்சி மற்றும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.  இதனை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Next Story