பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை பா.ஜனதா அரசு பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
புதுடெல்லி,
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க நேரிட்டது. மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக மாநிலங்களவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அவையில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
“திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் ஆலோசனை மேற்கொள்ளவே விரும்புகிறது. நாங்கள் பாராளுமன்றம் செயல்பட வேண்டும் மத்திய அரசு அதன் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அவையின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு தன்னுடைய தமிழக கூட்டணியை நிறுத்தியுள்ளது,” என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஒ பிரையன் கூறியுள்ளார்.
பா.ஜனதாவின் கூட்டணி என்று கூறியுள்ளாரே தவிர, எந்த கட்சியென்று குறிப்பிடவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவும், அதிமுகவும் கடும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் அமளி ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story