ரிசர்வ் வங்கி தங்களுக்கு சொந்தமானது என மோடி அரசு கருதுகிறது -ப.சிதம்பரம்
ரிசர்வ் வங்கி தங்களுக்கு சொந்தமானது என மோடி அரசு நினைக்கிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து அதிரடி திருப்பமாக உர்ஜித் பட்டேல் கவர்னர் பதவியை 10–ந் தேதி ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகியதாக கூறிய அவரது ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழக பிரிவை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளருமான சக்தி காந்ததாஸ் (வயது 61) நியமிக்கப்பட்டார்.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி தங்களுக்கு சொந்தமானது என மோடி அரசு நினைக்கிறது என்று குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் கூறியதாவது:-
இந்த அரசு இந்திய ரிசர்வ் வங்கி தனக்கு சொந்தமானது என நினைக்கிறது. இந்த அரசாங்கம் ரிசர்வ் வங்கி தனது அரசின் மற்றொரு துறையாக உள்ளது என அரசு கருதுகிறது. சிபிஐ நாம் சொல்வதை கேட்கிறது. ஆனால் ஏன் இந்திய ரிசரவ் வங்கி கேட்கவில்லை என நினைக்கிறது.
ஒரு மத்திய வங்கியின் சுதந்திரம் என்னவென்று இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை.
நான் உண்மையாகவே நம்புகிறேன், சக்திகாந்த தாசுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன், நீங்கள் (தாஸ்) தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர்.
நீங்கள் இப்போது பொருளாதார விவகாரங்கள் முன்னாள் செயலாளர் இல்லை, நீங்கள் இந்திய மத்திய வங்கியின் ஆளுநர், எனவே நீங்கள் இந்திய மத்திய வங்கியின் சுயாட்சி மற்றும் உரிமைகளுக்காக நிற்க வேண்டும். என கூறினார்.
Related Tags :
Next Story