ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது -அமித்ஷா


ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது  -அமித்ஷா
x
தினத்தந்தி 14 Dec 2018 10:14 AM GMT (Updated: 14 Dec 2018 10:14 AM GMT)

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.  இதற்கு மத்தியில், ரபேல் பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார். பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அதில் “ ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் நீதிமன்றத்துக்கு இல்லை. ரபேல் போர்விமான கொள்முதல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை.  போர் விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ரபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை, விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டது. 

இந்தநிலையில், ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். உண்மை வெற்றி பெற்றுள்ளது. துரதிஷ்டவசமாக நாட்டின் பழமையான கட்சியால் மக்கள் ஏமாற்றப்பட்டனர். ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து ஆதாரங்களையும் வைத்து இருந்தால் அதனை ஏன் அவர்கள்  உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. அவர்களுடைய பி குழு ஏற்கனவே அங்கு இருந்தது.

நாடாளுமன்றம் நடைபெறும் போது மட்டுமே காங்கிரஸ் ஜே.பி.சி பிரச்சினையை உருவாக்குகிறது. ரபேல் விவகாரத்தில் விவாதத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு நான் சவால் விடுக்கிறேன்.

ரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தற்காக காங். தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.  ரபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story