மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் மீட்கும் பணி தீவிரம்


மேகாலயா:  நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Dec 2018 6:13 PM GMT (Updated: 14 Dec 2018 6:55 PM GMT)

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவித்துவரும் 13 தொழிலாளர்கள் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லம்தாரி,

மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில், அருகில் உள்ள லைடெயின் ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது.

நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததும் 5 தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறினர். ஆனால் மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் காலையில் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து போலீசாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். அந்த தொழிலாளர்களை மீட்பதற்காக ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 60 பேர் அங்கு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் மேகாலயாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story