மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்


மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 Dec 2018 3:58 AM GMT (Updated: 15 Dec 2018 6:37 AM GMT)

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கவுகாத்தி,

மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில், அருகில் உள்ள லைடெயின் ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததும் 5 தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறினர். ஆனால் மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் காலையில் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து போலீசாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.   படகுகள், மற்றும் பம்ப்கள் ஆகியவை மூலம் மீட்க முடியுமா? என்பதை குறித்தும் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கைவிடப்பட்ட அந்த நிலக்கரி சுரங்கம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் சட்ட விரோதமாக செயல்பட துவங்கியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேகாலயாவில் சட்ட விரோத சுரங்கங்கள் செயல்படுவதாக ஒப்புக்கொண்டுள்ள அம்மாநில முதல் மந்திரி கொனர்டு சங்மா, சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story