விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்


விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 10:21 PM GMT)

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார்.

மும்பை,

சமீபத்தில் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்கரி, விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசினார். ‘சுமார் 40 ஆண்டுகள் அவர் வாங்கிய கடனுக்கு ஒழுங்காக வட்டி செலுத்தி வந்ததாகவும், ஒருமுறை தவறு செய்ததற்காக அவரை திருடன் போல் பார்க்கக்கூடாது’ என்றும் கூறி நிதின் கட்கரி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நிதின் கட்கரி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, வால்யா என்ற திருடன் மனம் திருந்தி வால்மீகி ஆனதுபோல், பா.ஜனதாவில் குற்றவாளிகள் சேர்ந்தாலும் அவர்கள் மனம் திருந்தி விடுவார்கள் என்றார். இது விஜய் மல்லையாவை வால்மீகி ஆக்கும் முயற்சி என்று நினைக்கிறேன்.

பா.ஜனதாவின் ஆதரவுடன் மல்லையா 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் பா.ஜனதாவிலேயே இணையப்போகிறாரா?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story