ரபேல் விவகாரம்: ‘மோடிக்கு எதிராக காங்கிரஸ் சதிதிட்டம்’ 70 இடங்களில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது பா.ஜனதா


ரபேல் விவகாரம்: ‘மோடிக்கு எதிராக காங்கிரஸ் சதிதிட்டம்’ 70 இடங்களில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது பா.ஜனதா
x
தினத்தந்தி 16 Dec 2018 11:38 AM GMT (Updated: 16 Dec 2018 11:38 AM GMT)

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் புகார், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்தியாவின் விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இதுபற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல்

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மூத்த வக்கீலுமான கபில் சிபலும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேயும் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது கபில் சிபல் கூறுகையில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு கூறவில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணம் காட்டுகிறது என சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தலைமை கணக்கு தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வு செய்துள்ளது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் அப்படி எந்த ஒரு அறிக்கையும் எனக்கு வரவில்லை என்று நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகிறார். அப்படியென்றால், இதற்கு யார் பொறுப்பு? யார் இதை சொன்னது? மத்திய அரசுதான் இதை கூறி இருக்கிறது. எப்படி அட்டார்னி ஜெனரல், அந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். கபில் சிபில் சுட்டிக்காட்டியுள்ள அம்சம், தீர்ப்பின் 25-வது பத்தியில் இடம் பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று கூறி காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பி உள்ளது.

மத்திய அரசு ‘திடீர்’ மனு

இந்த நிலையில், தீர்ப்பில் குறிப்பிட்ட பத்தியில் திருத்தம் செய்ய வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று திடீரென ஒரு மனு தாக்கல் செய்தது. இதுபற்றி மத்திய சட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, “தலைமை கணக்கு தணிக்கையர் மற்றும் பொது கணக்கு குழு தொடர்பாக மத்திய அரசு மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த ஆவணம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை தெரிவிக்கவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

70 இடங்களில் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் 70 இடங்களில் செய்தியாளர் சந்திப்பை பா.ஜனதா நடத்துகிறது. பிரதமர் மோடி மற்றும் அவருடைய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சதிதிட்டம் செய்கிறது என்பதை வெளிப்படுத்த இந்த செய்தியாளர் சந்திப்புக்கள் நடக்கிறது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

Next Story