ராஜஸ்தானில் ரூ.18,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி; காங்கிரஸ் அரசு உத்தரவு


ராஜஸ்தானில் ரூ.18,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி; காங்கிரஸ் அரசு உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2018 3:02 PM GMT (Updated: 19 Dec 2018 3:02 PM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.18,000 கோடி விவசாய கடனை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது.

ஜெய்ப்பூர்,

பாரதீய ஜனதா கட்சி வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட், மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பூகேஷ் பாகேல் ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர். 

தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் பதவி ஏற்ற மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை ரத்து செய்தார்.

அதை தொடர்ந்து சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூகேஷ் பாகேலும், சத்தீஷ்கார் மாநில விவசாயிகள் வணிக வங்கிகள், கிராம வங்கிகளில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெற்ற குறுகிய கால கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு மொத்தம் ரூ.6,100 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 16 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.18,000 கோடி விவசாய கடனை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது.  ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தள்ளுபடி செய்துள்ளார்.  இதனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story