ஐஆர்சிடிசி முறைகேடு: லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்


ஐஆர்சிடிசி முறைகேடு: லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
x
தினத்தந்தி 20 Dec 2018 7:19 AM GMT (Updated: 20 Dec 2018 7:19 AM GMT)

ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

புதுடெல்லி,

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. 

இந்நிலையில், இவ்வழக்கில் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story