பா.ஜனதா ஆட்சியை விட்டு செல்லும் பயணம் தொடங்கி விட்டது - சிவசேனா
பா.ஜனதா ஆட்சியை விட்டு செல்லும் பயணம் தொடங்கி விட்டது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, தொடர்ந்து பா.ஜனதாவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சமீபத்திய ஐந்து மாநில தேர்தலில் பா.ஜனதா ஆட்சி செய்த மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதனை விமர்சனம் செய்த சிவசேனா, பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்றது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அவசரச்சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா, மத்திய அரசு ஏமாற்றி விட்டது எனவும் குற்றம் சாட்டுகிறது.
இப்போது பா.ஜனதா ஆட்சியை விட்டு செல்லும் பயணம் தொடங்கி விட்டது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற வாக்குறுதி பா.ஜனதாவின் வெற்று வாக்குறுதிகளில் ஒன்றாக பார்க்கிறோம். பா.ஜனதா ஆட்சி செய்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் தோல்வி அடைந்த போதும் தோல்வியிலிருந்து பா.ஜனதா எழவில்லை. பகவத்கீதையை கோடிட்டு காட்டி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதிலிருந்தும் பாடம் கற்கவில்லை. அகங்காரம் என்ற வார்த்தையின் பயன் குறித்து பேசிய அவர் ‘நான்’ செய்வதுதான் சிறந்தது, ‘நான்’ இதை செய்தேன் என்று ‘நான்’ என்ற வார்த்தை குறிக்கிறது.
பா.ஜனதா தோல்வியிலிருந்து பாடம் கற்கவில்லை. கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து இன்னும் விழிக்கத் தயாராக இல்லை. கோவில் கட்ட வேண்டும் என்ற நெருக்கடி அதிகமாக உள்ளது. ஆனால், எப்போது கடவுள் ராமருக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறதோ?. 25 ஆண்டுகளாக திறந்தவெளியில் இருக்கிறார். பா.ஜனதா ஆட்சியில் இருந்து அகற்றும் பயணம் தொடங்கி இருக்கிறது. கோவில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவரவில்லை. பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற முடியவில்லை என்று சிவசேனா மத்திய அரசை காட்டமாக விமர்சனம் செய்துள்ளது.
Related Tags :
Next Story