எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி: எட்டாவது நாளாக முடங்கிய பாராளுமன்றம்


எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி:  எட்டாவது நாளாக முடங்கிய பாராளுமன்றம்
x
தினத்தந்தி 21 Dec 2018 8:19 AM GMT (Updated: 21 Dec 2018 8:19 AM GMT)

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் பாராளுமன்றம் 8-வது நாளாக முடங்கியது.

புதுடெல்லி,

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் ரபேல் விவகாரம் உள்பட பல்வேறு  விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளி நீடித்தது. இதையடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு, இனி வரும் 27 ஆம் தேதிதான் பாராளுமன்றம் கூட உள்ளது. 

இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக ரபேல் விவகாரம், காவிரி விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்களின் அமளி காரணமாக 8-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

Next Story