15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ.  உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 Dec 2018 11:54 AM GMT (Updated: 21 Dec 2018 11:54 AM GMT)

பீகார் மாநிலத்தில் 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ராஜ்பல்லப் யாதவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ்.  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடன் சுலேகா தேவியின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துளசி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், ராஜ்பல்லப் யாதவை கட்சியில் இருந்து நீக்கியதாக அம்மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார். தலைமறைவாக இருந்த ராஜ்பல்லப் யாதவை பின்னர் போலீசார் கைது செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

சுமார் இரண்டாண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 15-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, ராஜ்பல்லப் யாதவ் உள்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

ராஜ்பல்லப் யாதவுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பரசுராம சிங் யாதவ் உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனையும், இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story