ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; முன்னாள் விமான படை தளபதி தியாகி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி


ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; முன்னாள் விமான படை தளபதி தியாகி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 24 Dec 2018 11:22 AM GMT (Updated: 24 Dec 2018 11:22 AM GMT)

முன்னாள் விமான படை தளபதி தியாகி வெளிநாடு செல்வதற்கு டெல்லி நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிசெல், துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

இந்த வழக்கில் முன்னாள் இந்திய விமான படை தளபதி எஸ்.பி. தியாகிக்கு (வயது 73) தொடர்பு உள்ளது என புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ந்தேதி இந்த வழக்கில் தியாகி மற்றும் இங்கிலாந்து நாட்டவரான இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் ஆகியோரது பெயர்களை குற்றச்சாட்டு அறிக்கையில் குற்றவாளிகளாக சேர்த்து சி.பி.ஐ. பதிவு செய்தது.  இவ்வழக்கில் கூடுதலாக 9 பெயர்களும் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில், தியாகி மற்றும் அவரது உறவினரான சஞ்சீவ் தியாகி ஆகிய இருவரும் அடுத்த வருடம் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கோரியிருந்தனர்.

இதன்மீது நடந்த விசாரணையில் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் இவர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினார்.

இதேபோன்று அமலாக்க துறை சார்பில் பணமோசடி வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், இந்த வழக்கில் இதேபோன்று அவர்கள் கோரியிருந்த மனுவை ஜனவரி 3ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்கள் வெளிநாடு செல்வதற்கு அமலாக்க துறையினர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் இவர்களுக்கு வழங்கிய அனுமதி மறுக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றது.

Next Story