2019 தேர்தல்: சந்திரசேகர ராவை சந்திக்க ஐதராபாத் செல்கிறேன் -அகிலேஷ் யாதவ்


2019 தேர்தல்: சந்திரசேகர ராவை சந்திக்க ஐதராபாத் செல்கிறேன் -அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 26 Dec 2018 10:22 AM GMT (Updated: 26 Dec 2018 10:22 AM GMT)

ஐதராபாத்தில் சந்திரசேகர ராவை சந்தித்து பேச உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன.  காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகள் இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது. 

இதற்கிடையே  5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தீவிரம் காட்டுகிறது.

பா.ஜனதாவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கானா தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரசேகர ராவ், மூன்றாவது அணி என்ற கோஷத்தை முன்வைத்துள்ளார். காங்கிரஸ், பா.ஜனதா இல்லாத மூன்றாவது அணி என்று கூறுகிறார். ஆனால் இது பா.ஜனதாவிற்கே வலுசேர்க்கும் என்று விமர்சனம் செய்யப்படுகிறது. தெலுங்கானா தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற சந்திரசேகர ராவ் மூன்றாவது அணிக்கான பணியை தொடங்கிவிட்டார். முதலாவதாக ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக்கை சந்தித்து பேசினார்.  பின்னர் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நாங்கள் மிகவும் வலுவான திட்டத்துடன் வருவோம். பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத கூட்டணிக்காக என்னுடைய முழு நடவடிக்கையும் இருக்கும்,” என்றார். இந்நிலையில் ஐதராபாத்தில் சந்திரசேகர ராவை சந்தித்து பேச உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 

அகிலேஷ் யாதவ் பேசுகையில், “அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைக்க பல மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நோக்கத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் மேற்கொள்ளும் பணியை நான் பாராட்டுகிறேன். மூன்றாவது அணியில் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சி செய்து வருகிறார். நான் ஐதராபாத் சென்று சந்திரசேகர ராவை சந்தித்து பேச உள்ளேன்,” என கூறியுள்ளார். சந்திரசேகர ராவ் நாளை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் மாயாவதியையும், அகிலேஷ் யாதவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உபியில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே கூட்டணி அமைவதில் இழுபறி நீடிக்கும் நிலையில் இச்சந்திப்புக்கள் நடக்கிறது.

Next Story