முத்தலாக் மசோதா:உணர்ச்சிகரமான விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது மக்களவையில் காரசார விவாதம்


முத்தலாக் மசோதா:உணர்ச்சிகரமான விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது மக்களவையில் காரசார விவாதம்
x
தினத்தந்தி 27 Dec 2018 10:26 AM GMT (Updated: 27 Dec 2018 11:15 AM GMT)

முத்தலாக் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது என மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. #TripleTalaqBill

புதுடெல்லி

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 5 நாட்களுக்கு பின்னர் இன்று மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, இது ஒரு மிக முக்கியமான மசோதா ஆகும்.  இது குறித்து விரிவான ஆய்வு தேவை. இது ஓர் அரசியலமைப்பு விஷயம். பாராளுமன்ற  குழுவுக்கு மசோதா அனுப்பப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன் என கூறினார்.

முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

முத்தலாக் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மசோதா மீது விவாதம் நடத்த கூடாது என கோஷம் எழுப்பினர்.

முத்தலாக் மசோதாவிற்கு விளக்கம் அளித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

20 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கை தடை செய்து உள்ளன.  இந்தியாவை போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் அது ஏன் முடியாது? அரசியலின் முனையிலிருந்து இதை பார்க்க கூடாது என்று நான் கோருகிறேன்.

இந்த மசோதா  எந்தவொரு சமூகத்திற்கோ, மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ எதிரானது அல்ல. இந்த மசோதா பெண்களின் உரிமைகள் மற்றும் நீதி பற்றியது என கூறினார்.

அ.தி.மு.க எம்பி. அன்வர் ராஜா பேசியதாவது;-

தற்போதைய நிலையில் முத்தலாக் மசோதா சட்டவிரோதமானது.  இந்தியாவில் முஸ்லீம்கள் பின்தங்கி இருப்பதற்கு முத்தலாக் காரணம் என கூற முடியுமா?  அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள அடிப்படை  உரிமைகள் இந்த மசோதாவால்  பாதிக்கப்படும். இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஷரியத் சட்டம் மனிதர் உருவாக்கியது அல்ல. இறைவனால் அனுப்பப்பட்டது. முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல, இறைவனுக்கு எதிரானது. முத்தலாக் சட்டம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.

முத்தலாக் மசோதா  அரசியலமைப்புக்கு விரோதமானது.  3 ஆண்டு  சிறை என்பதும் நியாயமற்றது. முத்தலாக் தடை மசோதாவே தேவை இல்லை.  முஸ்லீம் தனி நபர் சட்டத்தில் முத்தலாக் மசோதா நேரடியாக தலையிடுகிறது.  உணர்ச்சிகரமான விஷயத்தில்  மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது. கண்துடைப்புக்காகவே இந்த  மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்து உள்ளது. நீங்கள் இந்த விஷயத்தில் தெரிந்தே தவறு செய்தீர்களானால் வருந்தியே ஆக வேண்டும் என கூறினார்.

மக்களவையில் பாரதீயஜனதா எம்.பி மீனாட்சி லெகி,பேசியதாவது:-

இங்கே முத்தலாக்கை எதிர்க்கும் நபர்களைக் கேட்க விரும்புகிறேன். புனித குர்ஆன் சூராவில் தலாக் இ-பித்-அத் என்று குறிப்பிட்டுள்ளது. இது அவர்களுக்கு  எதிரானது அல்ல, இவை மனித உரிமை மீறல்களின் பிரச்சினைகள் ஆகும் என கூறினார்.

Next Story