முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு வாழ்த்து - அமித்ஷா
முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறுகிற வழக்கம் இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்து விடும் ‘முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அத்துடன், இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில், இனறு இது தொடர்பான முறையான சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எதிர்க்கட்சிகள் கோரிய திருத்தங்களையும் மத்திய அரசு நிராகரித்தது. நீண்ட விவாதத்திற்கு பின்னர் மசோதா தொடர்பாக குரல் வாக்கெடுப்புக்கு நடவடிக்கை தொடங்கியது. முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பை தெரிவித்து, வாக்கெடுப்புக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் அதிமுக மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. 5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டுவிட்டரில் கூறியதாவது:
முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள். இஸ்லாமிய பெண்களின் சமத்துவம், கண்ணியத்தை உறுதி செய்யும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக செயல்பட்டதற்கு காங். உள்ளிட்ட கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Congratulations to PM Modi ji and the entire govt for successfully passing the Triple Talaq Bill in Lok Sabha.
— Amit Shah (@AmitShah) December 27, 2018
This is a historic step ensuring equality and dignity for the Muslim women. Congress and other parties must apologise for decades of injustice towards Muslim women.
Related Tags :
Next Story