மும்பை: அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து -5 பேர் பலி


மும்பை: அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து -5 பேர் பலி
x
தினத்தந்தி 28 Dec 2018 1:31 AM GMT (Updated: 28 Dec 2018 1:31 AM GMT)

மும்பையின் சேம்பர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

சேம்பர்,

மும்பையின் புறநகரில் உள்ள சேம்பர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தின் பி- பிரிவு அடுக்குமாடி கட்டிடத்தின் 11- வது தளத்தில் நேற்று இரவு 7.15 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. 

தகவல் அறிந்ததும் 15 வண்டிகளில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் வயதான நபர்கள் ஐந்து பேர் கடுமையான தீக்காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு தீ அணைப்பு படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர் இழந்த ஐந்து பேரில் 4 பேர் 70 -வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 

தீ அணைக்கும் பணியின் போது, தீ அணைப்பு வீரர் ஒருவரும் காயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீ எரிந்து கொண்டிருக்கும் போது, குடியிருப்பில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்ததால், தீயின் உக்கிரம் அதிகரித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த தீ தடுப்பு கருவிகளும் செயலற்ற இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story