மேகாலயா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்


மேகாலயா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Dec 2018 7:46 AM GMT (Updated: 28 Dec 2018 8:09 AM GMT)

மேகாலயா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும் வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 13-ந் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில், சுமார் 15 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

சுரங்கத்துக்குள் வெள்ள நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 அடி வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும். எனவே, அந்த அளவுக்கு நீரை வெளியேற்ற முயன்றபோது, குறைந்த சக்தி கொண்ட மோட்டார்களால் தண்ணீரை வேகமாக வெளியேற்ற முடியவில்லை. அத்துடன், மழையும் பெய்ததால் கடந்த திங்கட்கிழமை மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அதிக சக்திவாய்ந்த இழுவை திறன்கள் கொண்ட  மோட்டார்கள் விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலமாக மேகாலயாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீட்பு பணியில் இந்த சக்தி வாய்ந்த மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Next Story