மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடற்படை வல்லுநர் குழு


மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடற்படை வல்லுநர் குழு
x
தினத்தந்தி 28 Dec 2018 5:57 PM GMT (Updated: 28 Dec 2018 5:57 PM GMT)

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கடற்படை வல்லுநர் குழு ஈடுபட உள்ளது.

கவுகாத்தி,

மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பி வைத்துள்ளது.

மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர். ஆனால் அங்கு மீண்டும் மழையும் பெய்ததால் கடந்த 24-ம் தேதி மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

இதனிடையே அதிக சக்திவாய்ந்த இழுவை திறன்கள் கொண்ட  மோட்டார்கள் விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலமாக மேகாலயாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீட்பு பணியில் இந்த சக்தி வாய்ந்த மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், மேகாலயா நிலக்கரி சுரங்கத்தின் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பியது. அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Next Story