2வது உலக போரில் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் கண்டெடுப்பு


2வது உலக போரில் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 29 Dec 2018 10:24 AM GMT (Updated: 29 Dec 2018 11:02 AM GMT)

2வது உலக போரில் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கொல்கத்தா நகரில் கண்டெடுக்கப்பட்டது.

கொல்கத்தா,

2வது உலக போர் கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை நடந்தது.  இதில் இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகள், பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகியவை ஒரு கூட்டணியாகவும் மற்றும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை மற்றொரு கூட்டணியாகவும் இருந்து போரிட்டன.

இந்த போரில் இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவும் ஈடுபட்டது.  இதில் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஹூக்ளி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்த நேதாஜி சுபாஷ் கப்பல் செப்பனிடும் இடம் ஆனது,
அமெரிக்க கப்பற்படையால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த பகுதியில் தூர்வாரும் பணி நடந்தது.  இதில், ஏறக்குறைய 500 கிலோ எடை கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.  போலீசார், கப்பற்படை மற்றும் ராணுவம் ஆகியோருக்கு இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இதனை 2வது உலக போரில் பயன்படுத்திய வெடிகுண்டு என உறுதி செய்துள்ளனர்.  போர் விமானங்களுடன் இணைக்க கூடிய வகையிலான வடிவமைப்பினை கொண்ட இந்த வெடிகுண்டால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

ஏனெனில் இதனை வெடிக்க செய்வதற்கு என சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டிய வகையில் இதன் அமைப்பு உள்ளது.  சில குறிப்பிட்ட உயரத்தில் இருக்கும்பொழுது வான்வழியே இந்த வெடிகுண்டு வீசப்பட்டு வெடிக்க செய்யப்படுவது வழக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த வெடிகுண்டு அதிகாரிகள் உதவியுடன் செயலிழக்க செய்யப்படும்.

Next Story